ஹப்ஸா பின்து உமர் (ரலி) : حفصة بنت عمر
மக்காவிலுள்ள குரைசிக் கோத்திரத்தில் பனூ அதிய் என்ற கிளையில் பிறந்தவர்களே அன்னை ஹப்ஸா (ரலி) அவர்கள். இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களே இவரின் தந்தையாவார். இவரின் தாயார், இறைத்தூதர் (ஸல்) அவர்களால் ஜனாஸாத் தொழுகை தொழுவிக்கப்பட்டு, ஜன்னத்துல் பக்கீயில் முதன் முதல் அடக்கம் செய்யப்பட்ட நபித்தோழரான உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் சகோதரி ஸைனப் பின்த் மள்ஊன் ஆவார்கள். இன்னும் அன்னையின் சகோதரர்களில் ஒருவரான அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்களை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த நற்பண்புள்ளவர் என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்.
நபித்துவத்திற்கு ஐந்து வருடங்களுக்கு முன் பிறந்த இவர்கள் குனைஸ் பின் ஹுதாபா என்ற நபித்தோழருக்கு மனைவியாக இருந்தார்கள். அவர் பத்ருப் போரில் கலந்து கொண்டு விட்டு மதீனா திரும்பிய சில நாட்களில் மரணித்து விட்டார்கள். இந்த சமயத்தில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மருமகனாரான உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் தனது மனைவியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளுமான ருக்கையா (ரலி) அவர்களை இழந்திருந்தார்கள். எனவே, ருக்கையா (ரலி) அவர்களின் இடத்தை தனது மகளால் நிரப்ப இயலும், அதற்கு தனது மகள் முற்றிலும் தகுதி வாய்ந்தவர் தானே என எண்ணிய உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை அணுகி, தனது மகளை மணந்து கொள்ளும்படி கோரினார்கள். சோகத்தின் இறுக்கத்தில் இருந்த உதுமான் (ரலி) அவர்களோ, உமH (ரலி) அவர்களை ஒருமுறை பார்த்து விட்டு, சற்று அமைதி காத்து விட்டு பின்பு கூறிநார்கள், உமர் (ரலி) அவர்களே..! இது பற்றி சிந்திப்பதற்கு எனக்கு சற்று அவகாசம் தேவைப்படுகின்றது. மீண்டும் சில நாட்கள் கழித்து, தனது கோரிக்கையைப் பற்றி சிந்தித்தீர்களா உதுமான் (ரலி) அவர்களே..! என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட பொழுது, நான் இப்பொழுது மணமுடிக்கும் நிலையில் இல்லை என்று கூறி விட்டார்கள்.
பின் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் சென்ற உமர் (ரலி) அவர்கள், அபூபக்கர் (ரலி) அவர்களே..! எனது மகளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள் என்றார்கள். அதனைக் கேட்ட அபுபக்கர் (ரலி) எந்தப் பதிலையும் கூற மறுத்து விட்டார்கள். இதனால் மிகவும் மனமுடைந்த போன உமர் (ரலி) அவர்கள் நேரே தனது ஆருயிர்த் தோழர் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து நடந்த விபரங்களைக் கூறுகின்றார்கள்.
உமரே..! நீங்கள் வருத்தப்படவும் வேண்டாம், கவலைப் படவும் வேண்டாம். உதுமான் (ரலி) அவர்களை விடச் சிறந்த துணையை உங்களது மகளுக்கு அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான். அதுபோல உங்களது மகளை விடச் சிறந்த துணையை அல்லாஹ் உதுமான் (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான் என்று கூறினார்கள்.
சில நாட்கள் கழித்து, தனது மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை உதுமான் (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள். ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் தான் மணக்க விரும்புவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, உஹதுப் போருக்கு முன்பாக, ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இப்பொழுது அன்னையவர்களுக்கு 22 வயது நிரம்பியிருந்தது. பிறிதொரு நாள் உமர் (ரலி) அவர்களை சந்தித்த அபூ பக்ர் (ரலி) அவர்கள் நபியவர்கள் ஹப்ஸா மணமுடிக்கும் நோக்கில் இருந்ததால் தான் நான் ஒப்புக்கொள்ளவில்லை. நபியவர்களின் இந்த இரகசியத்தை வெளப்படுத்தவும் முடியவில்லை எனக் கூறினார்கள்.
அன்னையவர்கள் அதிக வணக்கசாலியாக இருந்தார்கள். மேலும் அரபு மொழியில் தேர்ச்சிபெற்றவராகவும் இருந்தார்கள். இதனால்தான் அன்னை ஆஇஷா (ரலி) அவர்கள் நபியவர்களின் மனைவியரில் எனக்கு சரிநிகராக இருந்தவர் ஹப்ஸாதான் என்று கூறினார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் தொகுக்கப்பட்ட அல்குர்ஆன் மூலப்பிரதி உமர் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டதும் அன்னை ஹப்ஸாவிடமே சிறிதுகாலம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 41ல் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தனது 60வது வயதில் அன்னை ஹப்ஸா (ரலி) அவர்கள் வபாத்தானார்கள். அப்போது மதீனாவிற்கு கவர்ணராக இருந்த மர்வான் பின் ஹகம் என்பவரால் தொழுகை நடாத்தப்பட்டு ஜன்னதுல் பகீஇல் அடக்கம் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.